bubble

LED

fire

ilm

ILM

Wednesday, October 6, 2010

நெஞ்சுக்கு நீதி



"நெஞ்சில் உங்களுக்கு ஈரம் ஊறுகின்ற காரணத்தினாலேதான் நீங்கள் எவ்வளவு கொடுமையான வியாதிகளையும் எவ்வளவு பார்க்கத்தக்க, முடியாத, இயலாத மோசமான வியாதிகளையும் நீங்கள் குணப்படுத்த ஒரு நோயாளியின் அருகே செல்கிறீர்கள் என்றால், நெஞ்சிலே இருக்கின்ற ஈரமும் அந்த ஈரத்தின் காரணமாக ஏற்படுகின்ற இதயக்கசிவும் தான் இதற்க்கெல்லாம் காரணம்.

இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து இன்று நேற்றல்ல -காலம் காலமாக மருத்துவத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கபடுகின்ற பயிற்சி எது என்பதை உணர்ந்து அந்த பயிற்சியையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு மனிதனை வாழவைக்க வேண்டும். அதற்க்காகத்தான் இந்த தொழிலை இன்றைக்கு கற்றிருக்கிறோம் ........."
(தினத்தந்தி01-03-2010)

இது தமிழக முதல்வர் 28 -02 -2010௦ அன்று சென்னை மருத்துவக்கல்லுரியின் 175வது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய மருத்துவக்கல்லுரியின் அடிக்கல் நாட்டு விழாவின் நிகழ்ச்சியில் மாணவர்களை பாராட்டியோதோடு மட்டுமல்லாமல் எப்படி மருத்துவர்களாக வெளியே வரவேண்டும் என்று கூறிய அறிவுரை தான்.

இதனை பிரசுரித்த பத்திரிக்கைகளின் மை காய்வதற்கு முன்னே முதல்வர், இன்னுமொரு கண்டிப்பான செய்தியினை - மக்களின் மனதில் அறுவருப்பினை ஏற்படுத்திய செய்தியினைப் பற்றிய செய்தியினையும் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது.

"..........................குற்றங்கள் நடைபெறும்போது அவை எப்படி நடத்தப்பட்டன, எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதை சான்றாக காட்ட, காட்டப்படும் படங்கள், செய்திகள் அளவுக்கு மீறி விடுகிறது.
அவற்றை படங்களாக பார்த்திடும் இளையோர்கள் நெஞ்ச்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதையும் அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும் .........................." என்று ,தினமலர் 05-03-2010) ஊடகத்துறையினருக்கு கண்டிப்பு குரல் கொடுத்திருக்கிறார்.
முதல்வர், இளையோர் நெஞ்சங்களையும், அவர்தம் உளப்பாதிப்பைப்பற்றியும் மேலும் நாளை உலகை ஆளப்போகும் இளைய சமுதாயத்தைப் பற்றியும் கவலை கொள்வதைப்போலவே, இன்று எல்லா மருத்துவர்களும், ஆய்வாளர்களும் - தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் தரம் பற்றியும் அதனால் ஏற்படும் உளரீதியிலான பிரச்சினைகள் பற்றியும் கட்டுரைகள் வாயிலாகவும், கருத்தரங்குகள் வாயிலாகவும் தங்கள் கருத்துக்களையும் வேதனைகளையும் வெளிப்படுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மருத்துவர்கள், முதல்வர் சொன்ன அந்த நெஞ்சின் ஈரம் மற்றும் அதன் இதயக்கசிவின் காரணமாக.

அண்மையில் சீனப் பிரதமரின் தாய் மூளையில் இரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நாளேடுகளில் வெளியானது அவர் அந்த நோய்க்கு எப்படி உள்ளானார் என்று மருத்துவர்கள் கூறுகையில், " தன மகன் அதாவது சீனப் பிரதமர் இங்கலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச்சென்றபோது ஒரு நபர் அவர் மீது ஷூ வை வீசி எறிந்தார், இதை தொலைகாட்சி வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த நோய்த்தக்குதலுக்கு ஆளானார் இந்த தாய்" என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

முதல்வரை கவலை கொள்ளச்செய்து கண்டிப்புடனும் இளைய சமுதாயம் மீது கொண்ட உண்மையான அக்கறையின்பாலும் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப படித்துப் பார்த்தால் அவை யாவுமே இன்று செய்திகள் என்ற பெயரில் அருவருக்கத்தக்க நிகழ்வுகளை காட்டியதற்கு மட்டுமல்ல, மாறாக இன்றைய திரைப்படங்களுக்கும், சிந்தனையினை மழுங்கடிக்கும் 'சீரியல்' களுக்கும் கூட பொருந்தும். ஏனென்றல் சின்னத்திரை இயக்குனர்கள் " நாட்டில் நடப்பதைத்தானே நாங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றோம் " என்கிறார்கள். பெரும் குற்றம் புரிந்து கைதாபவர்களோ, " எங்களை இது போல செய்யத்தூண்டியது திரைப்படக்கட்சிகளே" என்று வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

நடந்த குற்றம் எப்படி என்று செயல்முறை விளக்கங்களுடன் ஒளிவு மறைவின்றி செய்திகளாகவோ, தொடர்களகவோ, அல்லது நகைச்சுவையாகவோ ஏதோ ஒரு பெயரில் இன்று வீடுகளில் மட்டுமன்றி அலுவலகங்கள், பேருந்துநிலையங்கள், புகைவண்டிநிலையங்கள், மருத்துவமனைகள் என மனிதர்கள் கூடும் இடங்களில்லெல்லாம் தன் சேவையினை திறம்பட செய்துகொண்டிருக்கிறது தொலைக்காட்சி!

முதல்வர் சொன்னது போல் சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு ஈரத்துடன் அளப்பரிய சேவையினை செய்ய வரும் மருத்துவத்
துறையினரே! தரம் குறைந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதனால் உடல் உள்ளமும் பாதிப்படைகிறதென்று கருத்து தெரிவிக்கும் மருத்துவ உலகினரே! குறைந்தபட்சம் உங்கள் இடத்தினிலாவது அதாவது மருத் துவமனைகளிலாவது சாபக்கேடாக இன்று நம்மை அடிமைப்படுத்தி இருக்கும் மேற்சொன்ன நிகழ்ச்சிகளைத்தரும் அலைவரிசைகளை தவிர்த்து விடுதல் நலமாய் இருக்குமே. இந்த சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது என்பதிலும் நல்ல மனமாற்றங்களை ஏற்படுத்துவதிலும் ஏன் உங்கள் பங்கும் இருக்ககூடாது?

A Patient with patience என்ற மனநிலையில் வரும்போது, எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் அமைதியுடன் அமர்ந்திருக்கும் போது வழக்கமான கூச்சல், குழப்பம், ஆபாசம், பழிவாங்கல்- இவைதான் அவர்கள் முன்னே, போழுதுபோக்குவதற்க்காகவும் தன்னுடைய முறைக்காகக் காத்திருக்கும் வேளையில் சலிப்பேற்படாமல் இருப்பதற்கும் தரப்படுகின்ற மருந்தாக இருக்கிறது.

பொழுதுபோக்கிற்காக நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரே மருந்து -அருமருந்து இவைகள் தானே என்று எல்லோருமே நினைத்திருக்கிறோம். மாற்றாக, நேர்மறைசிந்தனைகளை தூண்டக்கூடிய, சமுதாயப்பிரச்சினைகளை சுட்டிக்காட்டக்கூடியதாக, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கின்ற தீமைகளை குறிப்பாய் மது, புகை மற்றும் புகைஇலைப்பொருட்களால் ஏற்படும் பெரும் வியாதிகளைப்பற்றியுமாக, மனிதர்களுக்கு சவாலாய் முன்நிற்கும் பூமி வெப்பமயமாதல், வட்டியின்கொடுமை, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை, அவற்றிக்கான தீர்வு மற்றும் பெற்றோர்களே போலீசாகமாறி குழந்தைகளைத் தண்டிக்கும் முறையினை மாற்ற முறையான குழந்தை வளர்ப்பு, கல்வியின் அவசியம், முதியோர் பேணல், முதலுதவி செய்முறை, வாகனம் ஓட்டும்போது செல்பேசி உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் -அவற்றிக்கான விழிப்புணர்வு என எண்ணற்ற குறும்படங்கள் சமுதாய சிந்தனை உள்ளவர்களால் நித்தம் நித்தம் தயரிக்கப்பட்டுகொண்டேதான் இருக்கின்றன. 'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' என்பது போல சமுதாய சௌக்கியம் உங்கள் 'இடத்திலிருந்து' தொடங்கட்டும்.

சில வேளைகளில் சில மருந்துகள் ஒவ்வாமையினால் பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தும்போது மாற்று மருந்து தருவது வழக்கம் தானே! இன்று சமுதாயத்திற்கு தேவைப்படும் மாற்று மருந்து உங்கள் கைகளில் இருந்து கிடைக்கட்டும்.


-புதுசுரபி